OURS IS NOT A BETTER WAY, OURS IS MERELY ANOTHER WAY
- From: Friendship with God

எமது வழிதான் சிறந்ததென்பதல்ல, இதுவும்கூட இன்னொருவழி அவ்வளவுதான்
-தமிழாக்கம்

Thursday, November 14, 2013

விஷ்ணுபுரம் என்ற நூலிலிருந்து எடுத்தவை...................

புயலடிக்கும் நள்ளிரவில், மின்னலொன்று காட்டிய காடு போன்றது பிரபஞ்சக் காட்சி. அக்காட்சியை வைத்து காட்டை அனுமானிப்பதே பிழையானது. அக்காட்சி நம் கண்களை அடைந்த கணம், ஒரு நூறு மரங்கள் சரிந்திருக்கும். அடுத்த மின்னல் நமக்குக் காட்டுவது வேறு காடு. மின்னலின் கணநேரம்தான் நமக்கு நிலைத்த காட்சியெனும் பிரமையை அளிக்கிறது.


Saturday, October 26, 2013

விஷ்ணுபுரம் என்ற நூலிலிருந்து எடுத்தவை


கேள் பிட்சுவே, திரை விலகுவதற்கு முன் இந்த வெற்று நாடக மேடையில் நிரம்பியிருப்பது என்ன?
புனையப்படாத வேடங்களின், நடிக்கப்படாத உணர்வுகளின், உருப்பெறாத உறவாடல்களின் நிகழாத நாடகம். நிகழ்கையில் இது பிறிதொரு மேடையின் அணியறையாகும்.
கேள் பிட்சுவே, அணியறையில் இப்போ மனிதர்களுக்கு பெயர்கள் தரப்படுகின்றன. முகங்கள் சூட்டப்படுகின்றன. கதையொன்றின் சரடால் அவர்கள் பின்னி இணைக்கப்படுகிறார்கள்.
இந்த மேடையில் இன்மையின் திரை விலக்கி பிறந்து வருகின்றன கதா பாத்திரங்கள். முயங்கி விடுபட்டு அழுது சிரித்து இந்த சிறு வெளியில் தங்களை நிகழ்த்துகின்றன.
கேள் பிட்சுவே, ஒரு நடிகனில் இரு நடிகர்கள் வாழ்கிறார்கள். தாமஸன் தன்னை இருட்டுக்குள் ஒளித்துக் கொள்கிறான். தைஜசன் தன்னை ஒளியில் ஒளித்துக் கொள்கிறான்.
இருவரும் ஒருவர் பார்க்க ஒருவர் தங்கள் வேடத்தை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். மண்ணுள் உறங்கும் விதையிலிருந்து பெருமரம் போல இம்மேடையில் தளிர்விட்டு தழைத்து விழுதாடி பூத்து கனிந்து பழுத்து விதைகளாகிறார்கள்.
ஆகவே, பிட்சுவே, இது திரை தூக்கப்படும் கணம். இந்த வெறுமையில் சற்று நேரம் அமர்ந்து தியானம் செய்க.

(அத்யாரோப தர்மதரிசனம் : ஆதிப் பிரபஞ்சம் குணரூபங்களாக மாறிய வகை)